அமீர் தெரிந்தே அப்படி சொல்லியிருக்கமாட்டார்... ஆனாலும்? | அவளின் குரல் - 01
இயக்குநர் அமீர், விஜய் சேதுபதியின் குழந்தைக்கு சிறார்வதை மிரட்டல் விடுத்த நபரைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், `பொதுவெளியில் பயணிக்கிற ஒவ்வொரு மனிதனின் செயலுக்காகவும் அவரது குடும்பத்தினரை அவமானப்படுத்துவதும் பொதுவெளியில் நச்சுக்கருத்துகளைப் பதிவிடுவதும் நல்ல சமூகத்தின் அடையாளம் கிடையாது’ என்று சாடியிருப்பவர், அடுத்து குறிப்பிட்டிருக்கும் வரி, முற்றிலும் முரண். ``அப்படி செய்பவர்கள் நல்ல தமிழ்த் தாய்க்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை" என்றிருக்கிறார் அமீர். வக்கிரக்காரர் ஒருவரின் குற்றத்துக்காக, அவருடைய அம்மா `நல்ல’ அம்மா இல்லை என கணிக்கும் அமீர், `குடும்பத்தினரை அவமானப்படுத்துவது’ குறித்து அதே அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?